
மஷ்ரூம்  பிரியாணி செய்யலாம்னு மஷ்ரூம் டப்பாவை  எடுத்தா 5-6 மஷ்ரூம்தான் மீதி  இருந்தது. மண்டையிலே இருந்த மூளையெல்லாம் சேர்த்து கஷ்டப்பட்டு யோசிச்சு  மீல் மேக்கரையும் மஷ்ரூமையும் சேர்த்து பிரியாணி செய்வோம்னு  செய்துபார்த்தேன். சூப்பரா இருந்துது காம்பினேஷன்! :)     பிரியாணி-  காளான்-சோயா எல்லாமே என்னவருக்கு மிகவும் பிடிச்சது,  ஸோ, இந்தக்  காம்பினேஷன் அடிக்கடி ரிபீட் ஆக ஆரம்பிச்சிடுச்சு எங்க வீட்டில்! 
தேவையான பொருட்கள் 
பாஸ்மதி அரிசி -11/4கப் 
வெங்காயம்-1 
பச்சைமிளகாய்-2 
தக்காளி(சிறியது)-1 
தேங்காய்ப்பால் பவுடர்-1டேபிள்ஸ்பூன் 
எண்ணெய் + நெய் -4டேபிள்ஸ்பூன் 
பட்டன் மஷ்ரூம்-6 
மீல் மேக்கர்-12 உருண்டைகள் 
புதினா,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-கொஞ்சம் 
பிரியாணி மசாலா-11/2டேபிள்ஸ்பூன் 
தயிர்-2டேபிள்ஸ்பூன் 
மஞ்சள்த்தூள்-1/4டீஸ்பூன் 
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன் 
கொத்தமல்லித்தூள்-1டீஸ்பூன் 
உப்பு 
பொடிக்க 
இஞ்சி-சிறுதுண்டு 
பூண்டு-5பல் 
பட்டை-3" துண்டு 
கிராம்பு-2 
ஏலக்காய்-1 
பிரியாணி இலை-1 
செய்முறை 
அரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சைமிளகாயையும் நறுக்கி வைக்கவும். 
மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் மூன்று நிமிடங்கள்  போட்டெடுத்து குளிர்ந்த நீரில் அலசி, தண்ணீரில்லாமல் பிழிந்து வைக்கவும். 
பொடிக்கக்  கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் கொறகொறப்பாகப் பொடித்துவைக்கவும். 
காளானை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கவும். 
ஒரு பாத்திரத்தில் காளான், மீல் மேக்கர்,  மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள், பிரியாணி மசாலா, தயிர், பொடித்த  மசாலா, உப்பு, கொஞ்சம் புதினா இலைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து 20  நிமிடங்கள்  வைக்கவும். 
குக்கரில் எண்ணெய்+நெய் காயவைத்து வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம்  வதங்கியதும் ஊறவைத்த மஷ்ரூம்-மீல்மேக்கர் கலவை, மீதியிருக்கும் புதினா  மற்றும் கறிவேப்பிலை  புதினாவைச் சேர்த்து  வதக்கவும். 
வதக்கும்போது தீயை மிதமாக வைத்து குக்கரை  (விசில் இல்லாமல்) மூடி  வைத்து அவ்வப்பொழுது கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும். 
தேங்காய்ப்பால் பவுடரையும் ஊறவைத்த அரிசியையும் சேர்த்து 11/2 கப் தண்ணீர் விட்டு உப்பு அளவை  சரிபார்த்து குக்கரை மூடவும். 
தீயின் அளவை மீடியமுக்கு அதிகரித்து ஏழு நிமிடங்களில் குக்கரை  அடுப்பிலிருந்து இறக்கவும். (விசில் வராவிட்டாலும் பரவாயில்லை, ஏழு  நிமிடத்தில் இறக்கி வைத்தால் ப்ரெஷர் குறைந்து குக்கரை திறக்கையில்  பிரியாணி பதமாக வெந்திருக்கும்.) .

கமகம  பிரியாணி ரெடி! அப்புறம் என்ன..தயிர் பச்சடியோ, மிர்ச்சி கா  சாலன் அல்லது  எண்ணெய்க் கத்திரிக்காயோ சைட்ல வைச்சு ஒரு புடி புடிக்க வேண்டியதுதேன்!  வாங்க சாப்பிடலாம்! :).